விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ரவுடி இயக்கம்... ராமதாஸ் கடும் பேச்சு

பாமக சார்பில் சென்னையில் காதல் திருமணம், வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்டவை குறித்த கருத்தரங்கை நடத்தினர். இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசுகையில் வழக்கம் போல தலித்களையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ராமதாஸின் பேச்சிலிருந்து சில பகுதிகள்:
தர்மபுரியில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு யார் காரணம்? என்ற பின்னணியை இன்னும் யாரும் சொல்லவில்லை. ஆய்வும் நடத்தப்படவில்லை. ஆனால், நாங்கள் தான் இந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் பண்ணுவதாக கூறுகிறார்கள்.
நாங்கள் நடத்துவது தமிழக மக்களின் வளர்ச்சிக்கான அரசியல். 22 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். நான் சொல்லவந்த உண்மை, முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு சமுதாய இயக்கமா? ஆதிதிராவிட மக்களுக்காக போராட வந்த இயக்கமா? அல்லது அரசியல் இயக்கமா?. இதில் எதுவும் இல்லை.
நாங்கள் திமுக, அதிமுக கூட்டணியில் இருந்தபோதெல்லாம், விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் சேர்த்தால் மற்ற ஓட்டுகள் கிடைக்காது என்று அந்த கட்சி தலைவர்களே கூறினார்கள். இப்போது, 81 சதவீத மக்கள் என் பக்கம் இருப்பதாகவும், 19 சதவீத மக்கள் அவர் பக்கம் இருப்பதாகவும் திருமாவளவன் கூறுகிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் தலைவர் இல்லை. இவரை தலித் என்றால், 75 சதவீத பட்டியலின மக்களான எங்களை
தலித் என கூற வேண்டாம் என்கின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வன்முறை இயக்கம், ரவுடி இயக்கம் என்று நான் பொத்தாம் பொதுவாக சொல்லவில்லை. தர்மபுரியில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு காரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நந்தன் என்பவர்தான். எல்லா மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இதைத்தான் செய்கிறார்கள். கட்ட பஞ்சாயத்து செய்து காசு பார்க்கின்றனர்.
இதுபோன்று தவறு செய்பவர்கள் பற்றிய தகவலை திரட்டி வருகிறோம். விரைவில் பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்போம். என்னைப்போல் தலித்துகளுக்காக பாடுபட்ட தலைவர்கள் இந்தியாவில் யாரும் இல்லை. விடுதலை சிறுத்தைகள் என்பது ஒரு வன்முறை கும்பல். அரசியல் கட்சி அல்ல. நீங்கள் வேண்டுமானால் என்னிடம் கேட்கலாம். அப்படியென்றால், ஏன் கூட்டணியில் அவர்களுடன் இருந்தீர்கள் என்று?. எங்களுடன் சேர்ந்தபோதாவது அவர்கள் திருந்துவார்கள் என்று நினைத்தோம். ஆனால், திருந்தவில்லை. அவர்களை திருத்தவும் முடியாது.
காதல் திருமணம், கலப்பு திருமணம் செய்தால்தான் சாதி ஒழியும், தமிழ் தேசியம் வளரும் என்று திருமாவளவன் சொல்லிவருகிறார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை என்று நீங்கள் சொல்ல தயாரா?. பரவலாக திட்டமிட்டு காசு பறிக்கும் செயலில் ஈடுபடுவதால் அனைத்து சமுதாய மக்களும் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இனியாவது இந்த கூட்டம் திருந்த வேண்டும்.
ஆதிதிராவிடர் பிள்ளைகளை திருமாவளவன் படிக்க சொல்ல வேண்டும். படித்து நல்ல வேலைக்கு சென்று திருமணம் செய்துகொள்ளலாம் என்று இளைஞர்களுக்கு நல்ல வழி காட்டுங்கள். வடதமிழ்நாடு அமைதியாக இருக்க காரணம் இந்த ராமதாஸ்தான். நான்தான் மதுரையில் இருந்த திருமாவளவனை இங்கே அழைத்தேன். 1996-ம் ஆண்டு சமூக நீதி கூட்டணியை நாங்கள்தான் அமைத்தோம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications