மேட்டூர் அணை தண்ணீர் நிறுத்தம்? கவலையில் காவிரி டெல்டா விவசாயிகள்

கர்நாடக அணைகளில் காவிரியில் திறந்துவிடப்படும் நீர் நிறுத்தப்பட்டதை அடுத்து அணைக்கு ஆயிரத்து 18 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 11 புள்ளி 85 டிஎம்சியாக உள்ளது.
இதே அளவு தண்ணீர் திறக்கப்பட்டால், அணையின் நீர் இருப்பு இன்று மாலையுடன் 11 டிஎம்சியாக குறைந்துவிடும். அந்த நீர் குடிநீர் மற்றும் மீன் வளர்ப்புக்குத் தேவை என்பதால், பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும் எனத் தெரிகிறது.
தற்போதைய நிலவரப்படி காவிரி டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்கு 20 முதல் 25 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் முற்றிலும் கருகி பயனற்றுப் போய்விடும் என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தொடரும் தற்கொலை
இதனிடையே விருதுநகர் மாவட்டத்தில் பயிர்கள் கருகுவதைக் கண்ட விவசாயி ஒருவர் நிலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எரிச்சநத்தம் அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பாண்டியன் நான்கு ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்திருந்தார். மழை பொய்த்துப்போனதால் தண்ணீர் இன்றி, பயிர்கள் வாடின. இதனால் மனமுடைந்த விவசாயி பாண்டியன் அவரது நிலத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அருகில் இருந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி பாண்டியன் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications