''பிரம்மா...அம்மா..'' டி.ஆர். மாதிரியே பேசுகிறார் நாஞ்சில் சம்பத்!

மதிமுக சம்பத்தாக இருந்து வந்த இவர் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவின் இணை கொள்கை பரப்புச் செயலாளராக பதவி பெற்றார். கூடவே இன்னோவா காரையும் பரிசாகப் பெற்றார்.
இந்த சூட்டோடு தற்போது பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார் சம்பத். நாகர்கோவிலில் நடந்த அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் சம்பத்.
அப்போது அவர் பேசுகையில், தனி மனிதனின் தலை எழுத்தை தீர்மானிப்பது பிரம்மா. தமிழகத்தின் தலை எழுத்தை தீர்மானிப்பது அம்மா என்ற நிலை இன்று உள்ளது.
நாம் எல்லாம் அதிகம் கேட்கும் வார்த்தைகள் அடுத்த பிரதமர் அவர் தான் என்ற நல்ல வார்த்தைகள்தான். மின் பற்றாக்குறையை காரணம் காட்டி திமுக செயற்குழுவை கூட்டி ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் நடத்தினால் மின்சாரம் வந்து விடுமா? மின்வெட்டுக்கு காரணமே திமுக தான்.
2001-2006-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் 500 மெகாவாட் மின்சாரம் தமிழகத்தில் உபரியாக இருந்தது. இதனால் வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. தற்பொழுது ஆட்சிக் காலத்தில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. உடன்குடியில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், உப்பூரில் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், வட சென்னையில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருகிற ஜூன் மாதத்தில் இருந்து தமிழ்நாடு மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும். கேரள மீனவர்கள் இருவரை இத்தாலியைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மத்திய அமைச்சர் அந்தோணி கேரளாவிற்கு ஆதரவாக செயல்பட்டார். இங்கு தமிழக மீனவர்கள் தினமும் இலங்கை ராணுவத்தால் தினமும் பாதிக்கப்பட்டு வருவதை தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதியமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ இதுவரை வாயை திறக்கவில்லை. தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று துணிச்சலோடு தீர்மானம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அன்னிய முதலீட்டுக்கு எதிரான வாக்கெடுப்புக்கு பல கட்சிகள் விலை போய் விட்டன. ஆனால் விலை போகாத ஒரே கட்சி அதிமுக மட்டும் தான் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications