தென் கொரியாவின் முதல் பெண் அதிபராக சர்வாதிகாரியின் மகள் தேர்வு: ஒபாமா வாழ்த்து

தென் கொரிய அதிபர் தேர்தலில் முன்னாள் சர்வாதிகாரி பார்க் சுங் ஹீயின் மகள் பார்க் ஜியூன் ஹை(60), மூன் ஜே உள்ளிட்டோர் போட்டியிட்டனர். 85 சதவீத வாக்குகள் பதிவானதில் பார்க் ஜியூன் ஹை 51.6 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் தென் கொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தென்கொரியாவின் பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்துவேன் என்று பார்க் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் வெற்றிக்கு பிறகு மத்திய சியோலில் பேசிய அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
பார்க் ஜியூன் ஹையின் தந்தை 18 ஆண்டுகள் தென் கொரியாவில் சர்வாதிகாரியாக இருந்தார். அவரை கடந்த 1979ம் ஆண்டு அவரின் உளவுப் பிரிவு தலைவரே சுட்டுக் கொன்றார். பார்க்கின் தாய் அவரது தந்தை இறப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு வட கொரியாவைச் சேர்ந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பார்க்கின் தந்தைக்கு வைத்த குறி அவரது தாயின் உயிரை எடுத்துவிட்டது.
தென் கொரியாவின் முதல் பெண் அதிபராகத் தேர்வாகியுள்ள பார்க்கிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications