மணிப்பூர் நடிகைக்கு பாலியல் தொந்தரவு... கண்டன ஆர்ப்பாட்டத்தில் வன்முறை!

மணிப்பூர் மாநிலம் சாண்டல் மாவட்டத்தில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடிகை மொமோகா கலந்துகொண்டார்.
அப்போது அவருக்கு நாகலிம் தேசிய சோசலிச கவுன்சிலின் முக்கிய பிரமுகர் லிவிங்ஸ்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதுகாவலர்கள், போலீசார் முன்னிலையிலேயே நடந்த இந்த சம்பவம் மணிப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மணிப்பூர் திரைப்பட சங்கம் சார்பில் நேற்று மாலை முதல்வரை சந்தித்து மனு கொடுப்பதற்கு சென்றனர். அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் நடிகர்கள் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர்.
இதையடுத்து நடிகையிடம் அத்துமீறி நடந்துகொண்ட லிவிங்ஸ்டனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மணிப்பூர் திரைப்பட சங்கம் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதற்கு பல்வேறு சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இம்பாலின் பல்வேறு இடங்களில் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள், தியேட்டர்கள் மூடப்பட்டன. சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதையும் மீறி சாலைகள் சென்ற வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன.
போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். குற்றவாளியை கைது செய்ய காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications