மேட்டூர் அணை மூடப்பட்டது: டெல்டா பாசன விவசாயிகள் கவலை

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் 1.15 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலும் திருவாரூர் மாவட்டத்தில் 1.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலும் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்படுகிறது.
குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வாடிக்கை. இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் அணை நிரம்பவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் 17ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் 84.33 அடியாக இருந்த அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது. ஆனால் நிலம் புயலால் சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. கர்நாடக அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படாத காரணத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்தது. இந்த நிலையில் டிசம்பர் 5ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதி வரை தினசரி 10000 கன அடி நீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த டிசம்பர் 6ம் தேதி நள்ளிரவு முதல் 9ம் தேதி மாலை வரை கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடகா. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததை அடுத்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 11,500 கனஅடிநீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஆயிரத்து 300 கனஅடியாக இருந்த குறைந்து போனது. இருப்பினும் கடந்த பலநாட்களாக, வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு வந்தது. நீர்வரத்து 10 டிஎம்சியாக குறைந்த நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் 35 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. இதனையடுத்து அணையிலிருந்து தற்போது பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியா நிறுத்தப்பட்டுவிட்டது.
மேட்டூர் அணை தண்ணீரை பயன்படுத்தும் பல்வேறு மாவட்டங்களில் குடிநீரின் அளவு குறைந்து தட்டுப்பாட்டு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் மேட்டூர் அணையில் இருந்து சனிக்கிழமை காலை 6 மணி முதல் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை எதுவும் உருவாகும் வாய்ப்பு இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு மேட்டூர் அணை நீர்மட்டம் 35 அடிக்கும் கீழே குறைந்துள்ளது. காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், டெல்டா பாசன விவசாயிகளுக்கு அதிர்ச்சி தரும் தகவலாக இது அமைந்துள்ளது. எனவே பயிர்களை காக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications