டெல்லி பயங்கரம் எதிரொலி...ஜன.4ல் தலைமை செயலாளர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டம்- ஷிண்டே

டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஷிண்டேவின் செயல்பாடு பலரது அதிருப்தியையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றம் குறித்து விவாதிக்க ஜனவரி 4ல் மத்திய அரசு தலைமையிலான கூட்டம் நடைபெறுகிறது. இதில், அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் என்று ஷிண்டே அறிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைப் பற்றியும், அதை தடுப்பது பற்றியும் விவாதிக்க மாநில தலைமைச்செயலாளர்கள், உயர்போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறினார். ஜனவரி 4ம் தேதி மத்திய அரசு தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சட்டத்தை கடுமையாக்குவது பற்றி விவாதிக்கப்படும் என்று கூறினார்.
டெல்லி மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இளையதலைமுறையினரிடையே அதிர்ச்சியையும், ஆக்ரோசத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் ஒன்று கூடி ஜனாதிபதி மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் பல்வேறு இடங்களில் பல குழுக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்புவதோடு மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை தாங்கியுள்ளனர்.
இதனால் மத்திய அரசு அவசர முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் மாநில தலைமைச்செயலாளர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமா ஷிண்டே.












Click it and Unblock the Notifications