பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மெரீனாவில் போராட்டம்: நடிகைகள் சுகாசினி, பூர்ணிமா பங்கேற்பு
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு நடவடிக்கை கோரி சென்னை மெரீனா கடற்கரையில் திரைப்பட நடிகைகள் சுகாசினி, பூர்ணிமாக பாக்கியராஜ் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிறு இரவு மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனையடுத்து மாணவர்களும், பெண்கள் அமைப்பினரும் டெல்லியில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிவருகிறது. தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் பள்ளிச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதில் ஸ்ரீவைகுண்டம் சிறுமி படுகொலை செய்யப்பட்டாள்.

மெரீனாவில் போராட்டம்
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிறு மாலை, 4:00 மணிக்கு நடிகர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர், கற்பழிப்புக் குற்றங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

பள்ளி மாணவி அழைப்பு
இந்த போராட்டத்திற்கு சென்னை எட்வர்ட் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து ஏராளமானோர் மெரீனா கடற்கரையில் திரண்டனர்.

சமூக வலைத்தளங்களில் அழைப்பு
இந்த போராட்டத்திற்கு ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடப்பட்டது. இதனையடுத்து 5000 பேர் வரை கடற்கரையில் திரண்டனர். இந்த போராட்டத்தில் நடிகைகள் சுகாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்கியராஜ், பாத்திமா பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

பேரணியாக மாறிய போராட்டம்
இதனையடுத்து போராட்டக்காரர்கள் அனைவரும் உழைப்பாளர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலங்கரை விளக்கம் வரை பேரணியாகச் சென்றனர்.அங்கு பல கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி முழக்கமிட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பதாகைகளை கைகளில் தாங்கியிருந்தனர்.












Click it and Unblock the Notifications