இலங்கையின் தடுப்புக் காவலில் புதுவை இரத்தினதுரை: சிங்கள ஏடு தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளராக இருந்தவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை. போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார். ஏற்கெனவே இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பான சாட்சியமளித்திருந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் யோகரத்தினம் என்ற யோகியின் மனைவி, தனது கணவர் மற்றும், கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 50 பேரை பேருந்து ஒன்றில் ஏற்றிச் சென்றதை தாம் கண்டதாக கூறியிருந்தார்.
இருப்பினும் புதுவை இரத்தினதுரை, பேபி சுப்பிரமணியம் உள்ளிட்ட மூத்த புலிகளின் தலைவர்கள் பற்றி எந்த தகவலும் தெரியாமலேயே இருந்து வந்தது. தற்போது புதுவை இரத்தினதுரையின் நிலையை இலங்கை அரசு தெரிவிக்க கோரி இணையம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இலங்கையில் இருந்து வெளியாகும் சிங்கள நாளேடான திவயின, புதுவை இரத்தினதுரை இலங்கை ராணுவத்தின் தடுப்புக் காவலில் இருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.