பலாத்கார குற்றத்துக்கான தண்டனை சட்டங்களில் திருத்தம்: பிரதமர் மன்மோகன்சிங்

டெல்லியில் 57-வது தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தை இன்று காலையில் தொடங்கி வைத்த பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:
உலக நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்தும் கவலைக்குரியதாக இருப்பதால் பல நாடுகளின் பொருளாதார முன்னேற்றமும் குறைந்து வருகிறது. நமது நாட்டுப் பொருளாதாரம் சீரடைய சிறிது காலமாகும். உள்நாட்டு பிரச்சனைகளில் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8% இலக்காகக் கொண்டு செயல்படுவோம். ஏழை எளியமக்களின் வாழ்வு மேம்பாடு அடைய வேண்டிய அவசியம். சமூகத்தின் பல்வேறு பிரிவு மக்களிடையேயான ஏற்றத் தாழ்வுகளை களைய வேண்டியதும் அவசியம்.
நமது நாட்டில் இளைய சமுதாயம் அதிகம் உள்ளது. கிராமப்பகுதியில் இருந்து வேலை தேடி நகர் பகுதிகளுக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இந்த இளைஞர்களுக்கு உரிய வேலை கிடைக்கா விட்டால் சமுதாயத்தில் அவர்கள் தவறான பாதைக்கு செல்ல வழி ஏற்பட்டு விடும். இதை போலீசார் உணர வேண்டும்.
இளம் பெண் தாக்குதல்
டெல்லியில் இளம் பெண் மீதான பாலியல் பலாத்கார தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. இந்தக் குற்றத்தில் ஈடுபட்டோருக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும். பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை சட்டங்களில் கடுமையான திருத்தம் கொண்டுவரப்படுவது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.
அனைத்து மாநிலங்களும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மானியம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் அவசியம். இதன் ஒருபகுதியாக "உங்கள் பணம். உங்களுக்காக" என்ற மானியத்தை நேரடியாக வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது என்றார் அவர்.
இதில் அரசு உறுதியாக இருக்கிறது என்றார். இன்றைய தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications