தயாநிதி அழகிரியிடம் சரமாரியாக கேள்வி கேட்டு போலீஸார் துருவித் துருவி விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி, சிந்து கிரானைட் அதிபர் செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் பங்குதாரரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான துரைதயாநிதி, அவருடைய நண்பர் நாகராஜ் உள்பட பலர் மீது கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் துரைதயாநிதி முன் ஜாமீன் பெற்றார். பி்ன்னர் கோர்ட் உத்தரவுப்படி அவர் தினமும் கீழவளவு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார்.
இந்த நிலையில் துரைதயாநிதிக்கு சம்மன் அனுப்பி மீண்டும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். துரைதயாநிதி நேற்று காலை 10.30 மணி அளவில் காரில் கீழவளவு போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்து போட வந்தார். அப்போது அவரிடம் விசாரணைக்கான சம்மனை போலீஸார் வழங்கினர்.
அதில், இன்று காலை 11 மணி அளவில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
சம்மனை பெற்றுக்கொண்ட துரைதயாநிதி இன்று காலை 11.25 மணிக்கு எஸ்பி அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் வக்கீல்கள் மோகன்குமார், குபேந்திரன், நந்தகோபால், செந்தில், வேல்முருகன் உள்பட 15-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.
பின்னர் துரை தயாநிதி, விசாரணை அதிகாரிகளான டிஎஸ்பி தங்கவேல், ஏடிஎஸ்பி மயில்வாகனன் ஆகியோர் முன்பு ஆஜரானார். அவரிடம் துருவித் துருவி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தில் எப்போது பங்குதாரராக சேர்ந்தீர்கள்? எவ்வளவு கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது? அதன் மதிப்பு என்ன? என்பது உள்பட நூ்ற்றுக்கணக்கான கேள்விகளைத் தயார் செய்து வைத்து அவற்றை தயாநிதியிடம் கேட்டு வருகின்றனர். விசாரணை இன்னும் முடிவடையவில்லை. மாலை வரை நீடிக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications