மத்திய அரசின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு- தெலுங்கானாவில் இன்று முழு அடைப்பு
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா பகுதிகளை உள்ளடக்கிய தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. இது தொடர்பாக பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த பிரச்சனையில் இறுதி முடிவு எடுக்க ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை மத்திய அரசு நேற்று கூட்டியிருந்தது. டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர்ராவ், வழக்கம் போல ஒரு மாதத்தில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தெலுங்கானா பகுதியில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று தெலுங்கானா பகுதியில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவின் 10 மாவட்டங்களிலும் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.