சென்னையில் வெளுத்து வாங்குது மழை... இன்னும் இரண்டு நாட்கள் தொடரும்!

இந்த மழை இன்னும் இரு தினங்களுக்குத் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் இலங்கைக்கு வெகு தொலைவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நேற்றும் இன்றும் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து ஆந்திராவையொட்டி உள்ள வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
நேற்று இரவு முதல் ஓரளவு கனமாக பெய்ய ஆரம்பித்த மழை, விடிகாலையில் பேய் மழையாக மாறியது.
சென்னை உள்ளிட்ட பெரும்பாலான கடலோரப் பகுதி நகரங்களில் நல்ல மழை பெய்தது.
தரைக்காற்றும் பலமாக வீச ஆரம்பித்துள்ளது. இன்னும் இரு தினங்களுக்கு இந்த நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காலையில் மட்டுமே தொடர்ந்து 3 மணி நேரம் மழை கொட்டியது. இந்த சீஸன் பனியும் குளிருமாகப் போய்விடுமோ.. குடிநீருக்கு என்ன செய்யப் போகிறோம் என்று தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு இந்த மழை பெரும் ஆறுதலைத் தந்துள்ளது.












Click it and Unblock the Notifications