கூடங்குளம் அணுமின்நிலையத்தில் கசிவு?: வெள்ளை அறிக்கை கேட்கும் உதயகுமார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜனவரி 1-ம் தேதி புதுச்சேரியில் பேசிய மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இரு வால்வுகளில் கசிவு ஏற்பட்டதாகவும், அதை இந்திய- ரஷ்ய விஞ்ஞானிகள் சரி செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதுவரை இயக்கப்படாத அணுஉலையில் எப்படி கசிவு ஏற்படும்? கசிவு ஏற்பட்டது உண்மை எனில், உச்சநீதிமன்றத்தை மதிக்காமல் அணுஉலை இயக்கப்பட்டுவிட்டதா? என்பதை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
மூன்றாம் தலைமுறை பாதுகாப்பானது என்றெல்லாம் அமைச்சர் உள்பட பலர் கூறிவரும் நிலையில் இப்போதே அணுஉலையில் கசிவு என்றால் நாளை விபரீத விளைவு ஏற்பட்டால் பாதிக்கப்படப்போவது தமிழக மக்கள்தான். பல லட்சம் மக்களின் உயிர் பிரச்சினையை உள்ளடக்கிய இந்த விஷயத்தில், துளியும் கவலையின்றி கருத்து தெரிவித்துள்ள இணை அமைச்சரின் பொறுப்பற்ற பதில் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அணுமின்நிலைய விபத்துகளில் இருந்து எப்படி தப்பிப்பது? என மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மாநில அரசை நீதிமன்றங்கள் அறிவுறுத்தி உள்ளன. ஆனால் நெல்லை மாவட்ட நிர்வாகமோ சம்பிரதாயமாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி முதியோர், விதவை உதவி தொகைகள் வழங்குகிறது. இது நீதிமன்ற அவமதிப்பு செயல். எனவே கூடங்குளம் அணுமின்நிலையத்தில் கசிவு ஏற்பட்டது என அமைச்சர் நாராயணசாமி கூறுவது தொடர்பாக அணுஉலை அதிகாரிகள் வெள்ளை அறிக்கை தரவேண்டும்.
இவ்வாறு உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் அணுமின்நிலையம் இயங்கும் என்று கடந்த ஒரு வருடகாலமாக கூறி வரும் அமைச்சர் நாராயணசாமி, திடீரென்று அணு உலையில் கசிவு ஏற்பட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டது என்று பீதியை கிளப்பியது ஏன் என்று அணு உலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications