பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆயுள் முழுவதும் தனிமைச் சிறை- கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
டெல்லியில் ஒரு மாணவிக்கு நடந்த கொடிய நிகழ்ச்சியைப்போல கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பாலியல் பலாத்காரம் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.
ஆயுள் சிறை
டெல்லியில் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாகி மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அதற்காக 30-12-2012 அன்று இரங்கல் செய்தி விடுத்தபோது, ‘‘ஏதோ ஒரு இடத்தில் மாத்திரமன்றி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக இத்தகைய கொடுமையான பாலியல் வன்முறைக்கு மாணவிகளும் ஏழைப்பெண்களும் ஆளாக்கப்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை என்பது அவர்களை ஆயுள் முழுவதும் தனிமைச்சிறையில் அடைத்துவைக்கவேண்டும் என்பது தான். இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவு எடுக்க வேண்டும்'' என்று அப்போதே கேட்டுக்கொண்டேன்.
தூக்கும் குண்டாஸும் கூடாது
பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு தூக்குத்தண்டனைதான் வழங்கவேண்டுமென்று பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கூறிவரும் நிலையில், நான் ஒருவன்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை என்பது, அவர்களை ஆயுள் முழுவதும் தனிமைச்சிறையில் அடைத்து வைக்கவேண்டும்; அதைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவெடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தேன்.அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தால் ஓராண்டு காலத்தில் அந்த குற்றவாளிகள் வெளியே வந்து விடுவார்கள். வெளியே வந்து மீண்டும் பாலியல் குற்றம் புரியமாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.சமூக சிந்தனையாளர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோரை போலவே தூக்குத்தண்டனை என்பதை நானும் எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. அதனால்தான் இந்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனையாக ‘‘ஆயுள் முழுவதும் தனிமைச்சிறையிலே அடைக்க வேண்டும் என்பதை என் கருத்தாக தெரிவித்தேன். இந்த கருத்து பற்றி மாநில அரசு சீர்தூக்கி பார்க்க மறுத்துவிட்டாலும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
தமிழக அரசின் திட்டம்
ஆனால் தமிழக அரசை பொறுத்தவரையில் இந்த பாலியல் வழக்குகளில் நடவடிக்கை எடுப்பது என்பது, காவல் நிலையத்தில் பெயருக்கு ஒரு வழக்குப்பதிவு என்ற அளவிலேதான் உள்ளது. தமிழகத்திலே பாலியல் கொடுமைக்கு ஆளான குடும்பங்கள் அனைத்துக்கும் தமிழக அரசின் சார்பில் விரைவில் உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு 13 அம்சத் திட்டத்தை ஏட்டளவில் அறிவித்தால், அதற்கு ஒரு சிலரின் வரவேற்பு அறிக்கைகள்தான் ஏடுகளில் வெளிவருமே தவிர, உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களாகவோ பாலியல் கொடுமைகள் நடந்துவிடாமல் தடுக்கவோ அவை பயன்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சிகிச்சை செலவு
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவை ஏற்பதும் ஒரு திட்டமாகும். இந்த ஆட்சியில் இதுவரை பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவை ஏற்பதோடு, அவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கவும் முன் வர வேண்டும்.ஏதோ அன்றாடம் அறிவிக்கின்ற அறிவிப்புகளில் ஒன்றாக இந்த 13 அம்ச திட்டங்களும் ஆகிவிடாமல், பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட மகளிருக்கு உண்மையாகவே உரிய முறையில் உதவிடவும், பாலியல் நிகழ்வுகளை தடுத்து நிறுத்திடவும் இந்த அரசு முன் வரவேண்டும். இந்த அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை மேலும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு கருணாநிதி அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications