பலாத்காரம் செய்த 6 பேரையும் எரித்துக் கொல்ல வலியுறுத்திய டெல்லி மாணவி
டெல்லியில் கடந்த மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 6 பேரால் சீரழிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் பிஸியோதெரபி மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 6 பேரையும் கைது செய்தனர். ஆனால் அதில் ஒருவர் 17 வயது மைனர் என்பதால் அவர் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அம்மாணவியுடன் பேருந்தில் பயணம் செய்து தாக்கப்பட்ட அவரது ஆண் நண்பர் கடந்த சனிக்கிழமை அன்று முதன்முதலாக இந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தனது தோழி அளித்த வாக்குமூலத்தில் உள்ள தகவல்களை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்த நிலையில் சுமார் 4 மணிநேரம் போராடி அவர் வாக்குமூலம் அளித்தார். தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை போலீசார் கைது செய்ததுடன் ஆதாரங்களையும் சேகரித்துள்ளது அவருக்கு தெரியும். அந்த 6 குற்றவாளிகளையும் தூக்கில் போடுவதற்கு பதில் அவர்களை உயிரோடு எரித்துக் கொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அவர் ஒவ்வொரு வார்த்தையையும் கஷ்டப்பட்டு பேசினார் என்றார்.