வட்டச் செயலாளர் 'வண்டு முருகனும்'.. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேரடி திடலில் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய இளங்கோவன்,
முதல்வர் ஜெயலலிதாவை தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் அதிக நேரம் பேச விடவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொடும்பாவியை எரித்து அதிமுகவினர் அநாகரீமாக நடந்து கொண்டார்கள்.
இதை நாங்கள் திருப்பி செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?. அந்த செயலை நாங்கள் செய்ய மாட்டோம். (''ஏன்னா எங்களால் அது முடியாது''.. என்று வட்டச் செயலாளர் 'வண்டு முருகன்' தொனியில் படிக்கவும்)
ஜெயலலிதாவுக்கும் தமிழகத்தில் மட்டும்தான் பிரச்சனை. ஆனால் பிரதமருக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். யாரையும் ஒதுக்குவதோ, வெறுப்பதோ மத்திய அரசின் எண்ணம் அல்ல.
இன்று தமிழ்நாட்டில் பெரும் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராடி வரும் உதயகுமாரை ஆரம்பத்திலேயே தமிழக அரசு தட்டிக் கேட்டிருந்தால் இப்போது கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்பட்டு கொண்டிருக்கும். இதன் மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகி இருக்கும்.
தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியால் விவசாயிகள் பலியாகி வருகிறார்கள். இவர்களுக்கு திமுக நிவாரண உதவி வழங்கி உள்ளது. விஜயகாந்தும் உதவிதொகை வழங்கி உள்ளார். காங்சிரசும் ஆறுதல் கூறி உள்ளது (!!!). ஆனால் அதிமுக இதுவரை என்ன செய்தது? என்றார்.