கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான 2 வழக்குகளை ரத்து செய்து ஹைகோர்ட் உத்தரவு!

திரைப்பட விநியோகம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் தம்மிடம் ரூ.6 கோடியே 75 லட்சத்தை மோசடி செய்துவிட்டார் என்பது திரைப்படத் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரத்தின் புகார்.
திரைப்பட விநியோகம் தொடர்பான விவகாரத்தில் தமக்குத் தர வேண்டிய ரூ.20 லட்சத்தைத் தராமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் தன்னை ஏமாற்றி விட்டனர் என்பது நரேஷ் பாபு என்பவரின் புகார்.
இப்புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீசார், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆர்.எம். ரமேஷ், செம்பியன் சிவகுமார், எஸ். கண்ணன் ஆகியோர் மீது 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்தனர்.
ஆனால் பொய் புகார் அடிப்படையில் 2 வழக்குகளையும் நீதிமன்றம் ரத்து செய்யக் கோரி கலாநிதி மாறன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி ஏ. ஆறுமுகசாமி, கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.
இந்த 2 வழக்குகளிலும் எழுந்துள்ள விவகாரங்கள் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில்தான் தீர்வு காண முடியும் என்றும் குற்ற வழக்கின் மூலம் இந்த விவகாரங்கள் பற்றி விசாரிக்க இயலாது என்பதால் ரத்து செய்வதாக நீதிபதி தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications