பொங்கலுக்குள் ஏழைகளுக்கு அரசின் ரூ.100 பரிசு கிடைக்குமா?: கருணாநிதி
சென்னை: பொங்கல் பொருட்கள் வாங்க அரசு அளிக்கும் ரூ.100 பரிசு பண்டிகை நாளுக்குள் பயனாளிகளுக்கு கிடைக்குமா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுக அரசு எப்போதும் ஏழைகள் நலன்களை அடிப்படையாகக் கொண்டே திட்டங்களை உருவாக்கி செயல்பட்டு வந்துள்ளது. இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு உள்பட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என்று சட்டம் இயற்றப்பட்டு, அந்த நாளையும், பொங்கல் நாளையும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக 2009ம் ஆண்டிலேயே சர்க்கரைப் பொங்கல் தயார் செய்வதற்குத் தேவைப்படும் பொருட்கள் கொடுக்கப்பட்டன. பச்சரிசி 500 கிராம், வெல்லம் 500 கிராம், பாசிப் பருப்பு 100 கிராம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் 20 கிராம் ஆகிய பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
அந்தத் திட்டத்தைத்தான் இப்போது சற்று மாற்றி அதிமுக அரசு அறிவித்துள்ளது.
ஒரு கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பொருள்களை வாங்குவதற்காக ரூ. 100 வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தையும் பொங்கலுக்குள் அனைவருக்கும் அரசு அளிக்க முடியுமா என்ற சந்தேகம் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
திமுக ஆட்சியில் இந்தத் திட்டத்தை பொங்கலுக்கு 27 நாள்களுக்கு முன்பே அறிவித்து வழங்கினோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications