ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அலுவலகத்தில் அமர்ந்து ஜெ.வைத் தாக்கி விஜயகாந்த் அதிரடி பேச்சு...!

விஜயகாந்த் இன்று தனது மனைவி பிரேமலதாவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார். அங்கு ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த அவர் கோவில் விமானம் அமைக்கும் பணிக்காக 105 கிராம் தங்கத்தை அன்பளிப்பாக கொடுத்தார்.
இதை நாச்சியார் டிரஸ்ட் ஊழியர் ராஜாராம் மற்றும் வேதாராம் பட்டர் ஆகியோரிடம் வழங்கிய விஜயகாந்த் பின்னர், கோயில் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் விஜயகாந்த். அங்கு அமர்ந்தபடி அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மக்கள் பிரச்னைகளைப் பேசினால், என் மீது தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்கிறது. திமுக தலைவர் கருணாநிதி, அவரது குடும்பத்தினரை ஜெயலலிதா எவ்வளவு விமர்சனம் செய்தார். எவ்வாறெல்லாம் பேசினார். ஆனால் கருணாநிதி என்ன அவதூறு வழக்கு தொடர்ந்தாரா? என் மீது அவதூறு வழக்குகள் தொடர்வது, ஜெயலலிதாவுக்கு பெருந்தன்மை குணம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.
மக்களுக்கு இலவசங்களைத் தருகிறார்கள். மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பதுதான் இது. எம்.ஜி.ஆரைவிட, ஜெயலலிதா என்ன செய்தார்? செய்துவிட்டார்? செய்ய முடியும். ஆண்டாள் கோயில் திருப்பணிக்கு தேமுதிகவினர் தாராளமாக உதவி செய்ய வேண்டும் என்றார் விஜயகாந்த்.
அரசுக்குச் சொந்தமான ஆண்டாள் கோயிலில் அரசு அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு, விஜயகாந்த் முதல்வரை விமர்சித்துப் பேசியதால் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். விஜயகாந்த்தை அலுவலகத்தில் அமர வைத்துப் பேச விட்டதற்காக தங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமோ என்ற அச்சமும் அவர்களுக்கு வந்துள்ளது. அதேபோல அரசு அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு முதல்வரை விமர்சித்துப் பேசியதால் விஜயகாந்த் மீதும் வழக்குப் பாயுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தஞ்சையிலும் அரசை கண்டித்து பேசுகிறார்...
இதற்கிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தஞ்சையில் ஏழை மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்குகிறார்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் தேமுதிக சார்பில் உழவர் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் விழா இன்று நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்குகிறார். மேலும் மழை பொய்த்துவிட்டதால் பயிர்கள் வாடியைதையடுத்து வறுமையின் கொடுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட 10 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25,000 நிதி உதவி அளிக்கிறார்.
இந்த விழாவில் காவிரி பாசனத்திற்கு கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் வாங்கித் தராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அவர் உரை நிகழ்த்துகிறார். ஏற்கனவே அவர் எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் அரசைக் கண்டித்து பேசுகிறாரோ அங்கெல்லாம் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தஞ்சையில் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications