உச்சி மலையில், மரங்களில் பதுங்கி சி.ஆர்.பி.எப். வீரர்களை சுற்றி வளைத்து தாக்கிய 500 நக்ஸல்கள்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் லடேகர் மலைப்பகுதியில் 600 சி.ஆர்.பி.எப். வீரர்களை 'L' வடிவத்தில் 500க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்த கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
லடேகர் மலைப்பகுதியில் ஜனவரி 6-ந் தேதியன்று மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மிகப் பெரும் தாக்குதலை சி.ஆர்.பி.எப். வீரகள் நடத்தினர். இதில் 12 வீரர்கள் பலியாகினர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் 4 பேருக்கு இன்னமும் நினைவு திரும்பவில்லை. காயமடைந்த அனைவரும் ராஞ்சியின் புறநகர் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலில் கிராம மக்கள் சிலரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்றும் கிராமவாசிகளில் ஒருவர் விஜய் துரி. இவர் லடேகரின் அம்வதிகர் கிராமத்தைச் சேர்ந்தவர். தமது வாழ்க்கையில் மறக்க முடியாத பெரும் யுத்தத்தைக் கண்டதாக கூறும் அவர் சம்பவத்தை விவரிக்கையில், "500 முதல் 600 வரையிலான சி.ஆர்.பி.எப். படையினர் எங்கள் பகுதிக்கு வந்தனர். தங்களுடன் இணைந்து வருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் வற்புறுத்தவில்லை. நாங்களும் சரி என்று அவர்களுடன் சேர்ந்து கொண்டோம். ஆண்கள், பெண்கள் என சுமார் 100 பேர் உடன் சென்றோம்.
நாளைக்கு எதாவது பிரச்சனை என்றால் என்ன செய்வது என்பதற்காக குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு சென்றோம். எங்கள் கூட்டத்தில் பெண்கள்தான் அதிகமாக இருந்தனர். நாங்க முன்னாடி போக சி.ஆர்.பி.எப். வீரர்கள் எங்களுக்குப் பின்னால் வந்தனர். அப்படிப் போனதில்தான் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 10 பேருக்கு காயம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.
தாக்குதலைப் பற்றிய விவரித்த சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர், ரயில் மூலமாக அதிகாலை 4.30க்கு பர்வாடியா என்ற இடத்தில் இருந்து புறப்பட்டோம். ஹெடெஹரா ரயில் நிலையத்தில் இறங்கி கடியா வனப்பகுதிக்குள் சுமார் 15 கிலோ மீட்டர் வரை நடந்தோம். மலை அடிவாரத்தை நாங்கள் அடைந்த சில நிமிடங்கள்தான் இருக்கும்... அனேகமாக 500 மாவோயிஸ்டுகள் இருக்கலாம். எங்களை L வடிவத்தில் சுற்றி வளைத்து தாக்கினர். அவர்கள் உச்சி மலையில் மரங்களில் மேலே அமர்ந்தபடி எங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதல் இருட்டும் வரை நீடித்தது. காணாமல் போன வீரர்களை இருட்டால் எங்களால் தேட முடியவில்லை. அடுத்த நாள் வீரர்களைத் தேடிப் போன போதும், அவர்களது உடலை மீட்க முயற்சித்த போதும் மீண்டும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். அப்படி மீட்கப்பட்ட உடல்களில்தான் திரவ வெடிகுண்டும் இதர வெடிகுண்டுகளும் இருந்தன என்றார் அவர்.
சிகிச்சை பெற்று வருவோரை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் சிபுசோரனும் பாஜக தலைவர் தினேஷ்சந்த் கோஸ்வாமியும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.












Click it and Unblock the Notifications