சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மூவர் பலி
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் 2பேர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில், சிவகாசியை சேர்ந்த கதிரேசன் என்பவருக்கு சொந்தமான "ரவீந்திரா பயர் ஒர்க்ஸ்' பட்டாசு தொழிற்சாலை, உள்ளது. 32 அறைகள் உள்ள இந்த ஆலையில் அறை எண் 25 ல், நேற்று மாலை 4.25 மணிக்கு, வெடி மருந்து கலக்கும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிகழ்ந்த உராய்வால், வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
அறைக்குள் வேலை செய்துகொண்டிருந்த, கீழத்தாயில்பட்டி சுந்தரம்,50, அறிவழகன்,45, மேட்டமலை பொன்னுச்சாமி,50, ஆகியோர் உடல் சிதறி பலியாயினர். இவர்களது உடல்கள் தூக்கி வீசப்பட்டு, 20 மீட்டருக்கு அப்பால் கிடந்தன.
தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தை, விருதுநகர் கலெக்டர் ஹரிகரன்.எஸ்.பி., மகேஸ்வரன் பார்வையிட்டனர்.
பட்டாசு ஆலையின் மருந்து கலக்கும் அறையில் விபத்து நடந்துள்ளது. இறந்த சுந்தரம், அறிவழகன் இருவரும், நேற்று தான் புதியதாக வேலைக்கு சேர்ந்துள்ளனர் என்று போலீஸ்விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு பட்டாசு தயாரிப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. விபத்து தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் கதிரேசனை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதலிபட்டி ஓம் சக்தி பட்டாசு ஆலையில், நடந்த வெடி விபத்தில், 41 பேர் பலியானார். இதன்பிறகு, அதிகாரிகள் அடங்கிய 11 குழுக்கள், பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்தது. விதி மீறல் காரணமாக, 63 ஆலைகளுக்கு "சீல்' வைக்கப்பட்டது.
தீபாவளிக்கு பின், ஆய்வு நடத்தப்படும், என கூறிய மாவட்ட நிர்வாகம், கண்டு கொள்ளாமல் விட்டது இதன்காரணமாகவே தற்போது விபத்து நேர்ந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.