வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுத்தோம்… மோசடி செய்துவிட்டனர்: பவானி பாபு மீது இளைஞர்கள் புகார்

தமிழகத்தில் விலங்குகள் பாதுகாப்பு என்ற தனிப்பிரிவு தொடங்கப் பட்டுள்ளதாகவும் அதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் விளம்பரம் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்த பவானி பாபு உள்ளிட்ட ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பவானிபாபு ஓய்வு பெற்ற நீதிபதி என்பதால், காவல் துறையில் என்னை தெரியாத ஆட்களே இருக்க முடியாது என தெரிவித்து இளைஞர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இந்த மோசடிக்கு போலீசாரையே பக்க பலமாக அவர் வைத்து இருந்துள்ளார். அதற்காக மாவட்டம் தோறும் பயணம் செய்து, தான் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி என தெரிவித்து வந்துள்ளார். இவரது பேச்சில் மயங்கிய உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர், ஆயுதப்படை மைதானங்களில், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க அனுமதி அளித்துள்ளனர். பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு, போலீஸ் போல் சீருடை அணிவித்து, போலீசாரின் கையால் பரிசு வழங்கச் செய்து, அதை புகைப்படம் எடுத்து, விளம்பரம் செய்து, மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குவியும் புகார்கள்
இதனிடையே தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் இருந்து 27க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பவானி பாபு மீது மோசடி புகார் அளித்துள்ளனர். அரசு வேலை கிடைக்கிறது என்பதற்காக வறுமையான சூழ்நிலையிலும் வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்தோம். ஆனால் இப்படி மோசம் போய்விட்டோமே என, கண்ணீர் விட்டனர் இளைஞர்கள்.
நேரடி நியமனம்
ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த பெரம்பலூரைச் சேர்ந்த ராம்ராஜ் என்பவர் தான் ஏமாந்த கதையை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பி.காம் படித்த நான், காவல் துறையில் சேர தீவிரமாக பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தேன். 2001ம் ஆண்டு முதல் நிலை காவலர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தேன். தேர்வு உள்பட அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து விட்டன. மருத்துவ பரிசோதனை மட்டும் இருந்தது.
இந்நிலையில், எனது உறவினர் ஒருவர் பவானி பாபுவை அறிமுகம் செய்து வைத்தார். அவர் நேரடியாக இன்ஸ்பெக்டராக வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதனால், முதல் நிலை காவலருக்கான மருத்துவ பரிசோதனைக்கு நான் செல்லவில்லை. சில நாட்களுக்கு பிறகு அவரிடம் இன்ஸ்பெக்டர் பணிக்கு முதற்கட்டமாக ரூ.1.5 லட்சம் பணம் கட்டினேன். இதற்காக எனக்கு பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ் மையத்தில் 4 நாள் பயிற்சி கொடுத்தார். இறுதியில்தான் இவை அனைத்தும் பொய் என்பது தெரிந்தது என்றார்.
திருப்பூரை சேர்ந்த ரஞ்சித்குமார் 6 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்துள்ளார். நேரடியாக இன்ஸ்பெக்டர் ஆக்குவதாக பவானிபாபு கூறியதை நம்பி அவரிடம் எனது தந்தை ரூ.6 லட்சம் கொடுத்தார். எனக்கு பயிற்சி கொடுக்கப்பட்டபோது கேரளாவை சேர்ந்த 4 பேரும் என்னுடன் இருந்துள்ளனர் என்றார் ரஞ்சித் குமார்.
போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
பவானி பாபுவின் மோசடி வேலைக்கு துணையாகச் செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் யார்; எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது;யார், யார்பயிற்சி அளித்தனர்; ஊர் முழுக்க, இளைஞர்களிடம் பணம் வசூல் செய்து,மோசடி செய்துவந்த பவானி பாபுவுக்கு, உதவி செய்த,உயர் போலீஸ் அதிகாரி யார் என்ற விபரங்கள்சேகரிக்கப்படுகின்றன. மோசடிக்கு உதவி செய்த அனைத்து போலீசார் மீதும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, உயர் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications