உழவர் திருநாள்: கருணாநிதி, விஜயகாந்த், தலைவர்கள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது.

தைத்திங்கள் முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு- பொங்கல் திருநாள்! இந்நன்னாளை உற்றார், உறவினர், நண்பர்களின் வாழ்த்தொலி முழங்கக் குடும்பத்தோடு கொண்டாடி மகிழும் எனது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட அருமைத் தமிழ் மக்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

2006ல் ஆட்சிப் பொறுப்பேற்ற விழா மேடையிலேயே, 7000 கோடி ரூபாய் கூட்டுறவு விவசாயக் கடன்களை ரத்து செய்து, விவசாய பம்ப் செட்டுகளுக்கான இலவச மின்சாரத்தை உறுதி செய்து, சிறப்புக் கட்டணம் செலுத்தி வந்த 2 லட்சத்து 40 ஆயிரம் விவசாயப் பம்ப் செட்டுகளுக்கும் புதிதாக இலவச மின்சாரம் தந்து; வட்டியில்லா விவசாயக் கடன் வழங்கி, ஏறத்தாழ 1 லட்சத்து 80 ஆயிரம் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் இலவச நிலம் வழங்கி, பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் 50 சதவீத காப்பீட்டுத் தொகையை கழக அரசே செலுத்தி, காப்பீட்டுத் திட்டத்தில் அதிக அளவில் விவசாயிகளை இணைத்து, 9 லட்சத்து 643 விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீடு கிடைக்கச் செய்து, நெல் குவிண்டால் ஒன்றுக்கு, 1,100 ரூபாய், கரும்பு டன் ஒன்றுக்கு 2,000 ரூபாய் என விலைகளை உயர்த்தித் தந்து - ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ நல்ல அரிசி, மாதம் தோறும் குறைந்த விலையில் பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு, மானிய விலையில் 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருட்கள் என வழங்கி- 2006-2011 ஆகிய 5 ஆண்டுகளிலும் தமிழக மக்களின், குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வை வளப் படுத்திய அந்த வசந்த காலத்தை நினைக்கின்றேன்.

தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல் கழக அரசு தொடங்கிய வல்லூர், வடசென்னை, மேட்டூர் அனல் மின்நிலையப் பணிகளை விரைவுபடுத்திச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையால் பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் கிடைக்காமல் விவசாயம் முற்றிலும் முடங்கி தமிழக விவசாயிகள் வேதனையில் மூழ்கிக் கிடக்கின்றனர். மேலும், அனைத்துப் பொருள்களின் விலைவாசிகளும் வெகுவாக உயர்ந்து எல்லா வகையிலும் தமிழக மக்கள் அல்லப்படுகின்றனர்.

இந்த நிலையை எண்ணும்போது இதயம் விம்முகிறது. இரு விழிகளிலும் நீர் அருவியாகிறது. எனினும், புலரும் புத்தாண்டு கைகொடுக்கும்! இளம் தளிர்கள் எழுச்சி பெறும்! புதிய வாழ்வு உதயமாகும்! எனும் நம்பிக்கையுடன் தமிழ்ப் புத்தாண்டு- பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திட உளமார வாழ்த்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வாழ்த்து:

இயற்கை பொய்த்துப் போனதாலும், காவிரியில் தண்ணீர் வராததாலும் தமிழக விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலை மாறி வருங்காலங்களில் நல்ல தீர்வு ஏற்படும் என்று இத்தைத் திருநாளில் நாம் முழுமையாக நம்புவோம்.

இத்தை பொங்கல் தமிழக மக்களுக்கு ஓர் புதிய விடியலையும், நம்பிக்கையும் அளித்து வறுமை நீங்கி வளம் பெருகவும், வளமான தமிழகம், வலிமையான பாரதம் அமைந்திடவும் அனைவரது மனதில் மகிழ்ச்சி பொங்கிடவும் எனது மனம் நிறைந்த பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து:

இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்ற அடிப்படையில் இருப்பவர்கள், இல்லாதவர்களோடு பகிர்ந்து கொண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

இந்த பொங்கல் திருநாள் தமிழ்நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்வில் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் ஒரு திருப்பு முனையாக அமைய வேண்டும். இந்த பொங்கல் புதுநாளில் உற்றார் உறவினர்களோடும், நண்பர்களோடும், வளர்த்த பெற்றோர்களுடனும், வளர்ந்து வரும் பிள்ளைகளுடனும் சேர்ந்து, கலந்து உறவாடி, மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வாழ்த்து:

உழைத்த உழைப்புக்கு பலன் பெற்று வெற்றிக்கு துணையாக இருந்த மண்ணுக்கும், விண்ணுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கிற நாள் தை திருநாள்.

காவிரி நீரை எதிர்பார்த்து காத்திருக்கிற டெல்டா விவசாயிகளின் துயர் தீரவும், தமிழகம் முழுவதும் மத்திய அரசு தீட்டுகிற திட்டங்கள் செம்மையாக சென்றடைந்து தமிழக மக்கள் வாழ்வுயரவும், இத்தைத் திருநாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் என் மனம் மகிழ்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து:

நதிநீர் பெருக்கெடுத்து மணல் கொள்ளை அகலவும், வான்மழை பொய்யாது பெய்து மண்வளம் சிறக்கவும், பொன்விளையும் பூமி அன்னையின் விளை நிலம் விலை நிலமாய் மாறாதிருக்கவும், உழுகின்ற காளையும் பால் தருகின்ற பசு இனமும் மனிதன் பாழ் வயிற்றை பசியாற்றும் கறியாகாது காக்கவும், உழுதவர் வாழ்வை உயர்த்தும் நல்அரசு அமையவும், இரவை அகற்றும் இரவியின் அருளும் உலகை படைத்த அன்னை சக்தியின் அருளும் இம்மியும் குறையாது தை பொங்கல் முதல் கிடைக்க பிரார்த்தித்து அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து:

உழவர்களின் துயரங்கள் அனைத்தும் மார்கழி மாதத்து பனி போல விலக வேண்டும். உலகின் மூத்த குடியான தமிழ்க்குடி அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும். உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தை சூழ்ந்துள்ள தீமைகள் அகல வேண்டும். அடுத்த தைத் திருநாளிலாவது மது இல்லா மாநிலமாக தமிழகம் உருவெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட இலக்குகளை வென்றெடுக்க நாம் அனைவரும் இந்த நன்னாளில் உறுதியேற்க வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து:

பொங்கலைக் கொண்டாடும் உழைக்கும் தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். சாதி-மத ஆதிக்கத்தை வேரறுக்கவும், ஆணாதிக்க ஆணவத்தைத் தகர்த்தெறியவும் உழைக்கும் மக்களாய் இணைவோம் ஒன்றாய்! வாழ்வோம் இணையாய்! என்று இந்தப் பொங்கல் திருநாளில் உறுதியேற்போம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து:

பன்முகப் பண்பாட்டால் நம்முடைய இந்தியத் திருநாடு நிமிர்ந்து நிற்கிறது. மக்கள் ஒற்றுமையை, மதச் சார்பின்மையை கெடுக்க முயலும் குறுகிய நோக்கம் கொண்ட மதவெறி சக்திகளை முறியடிக்க வேண்டும். அநீதிக்கெதிராக, அக்கிர மத்திற்கெதிராக- மக்கள் வாழ்வை நாசம் செய்யும் தீய கொள்கைகளுக்கு எதிராக பொங்கிட இந்த பொங்கல் நாளில் உறுதியேற்போம்.

எத்தகைய சோதனைகளை சந்தித்தாலும் துயர் அகலும் நம்பிக்கையுடன் உழவர் திருநாள் பொங்கல் விழா கொண்டாடிட வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வாழ்த்து:

கடந்த ஆண்டு இயற்கையின் சோதனையால், தகுந்த மழை பொழியாமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. விளை நிலங்கள் எல்லாம் வறண்டு போயின. இன்று பிறக்கின்ற தைத்திருநாள் உழவர்களின் கண்ணீரை துடைக்கின்ற ஆண்டாக அமைய வேண்டும். இயற்கை அன்னை, நமக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தேவையான அளவு மழையை வழங்கி, நாம் தண்ணீருக்காக எவரிடத்திலும் கையேந்தி நிற்காத தன்னிறைவு காண அருள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+