போதையில் சிக்கியுள்ள தமிழகம் மீளும்... வைகோ பொங்கல் வாழ்த்து
சென்னை: மதுவின் போதையிலும், இலவசத்தின் போதையிலும் சிக்கியுள்ள தமிழகம் அதிலிருந்து மீண்டு பெருமையை நிலைநாட்டும் காலம் மலரும் என்று வைகோ வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துக்களில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
உயிர்களை வாழ வைக்கும் உணவுத் தானியங்களைத் தன் மேனி சிந்திய வியர்வைத் துளிகளால் விளைவித்துத் தரும் வேளாண் பெருங்குடி மக்கள், தாம் தாயாகப் போற்றும் நிலத்துக்கும், கால்நடைச் செல்வங்கட்கும், நன்றி காட்டும் உன்னதப் பெருவிழாதான் தைப்பொங்கல் திருவிழா ஆகும்.
தித்திக்கும் தேனாக, கரும்பு தந்த சர்க்கரையும், செழித்த கழனி தந்த நெல்மணிகளின் அரிசியும், நறுபசுவின் நன்நெய்யும் கொண்டு, புதுப் பானையில் பொங்கி எடுத்த சர்க்கரைப் பொங்கலை உழவன், தன் இல்லத்தாரோடு பகிர்ந்து உண்டு, பொங்கலோ பொங்கல் என்று குதூகலித்துக் கொண்டாடும் திருநாள் அன்றோ தைப் பொங்கல் நன்னாள்.
தமிழ்நாட்டில் கொண்டல்கள் மழை தர மறுத்ததாலும், இயற்கையின் மடியை நாசப்படுத்தும் மனிதனின் அக்கிரமச் செயலால் மணற் பாங்குகள் சூறையிடப்பட்டு, நிலத்தடி நீர் வறண்டே போனதாலும், பயிர்கள் பருகும் பாலான தண்ணீர் அற்றுப் போனதாலும், விவசாயிகள் துன்பத்தில் துவண்டு, களிப்புடன் பொங்கலைக் கொண்டாட முடியாத அவலம் இங்கே. பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கும் வயல்கள், வறண்டு போன வாவி, குளங்கள்; கால்நடைகளுக்கும் குடிக்க நீர் இல்லாத துயர நிலை.
தலைமுறை தலைமுறையாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்கள் கொண்டாடி வரும் பொங்கல் நாளில், காரிருளுக்குப் பின்னர் வெளிச்சம் உதிக்கும் என்ற நியதியின்படி, தை பிறந்து விட்டது; இனியாவது நமக்கு ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு பெற்றோரை, கரம்பற்றிய மனையாளை, வளரும் பிள்ளைச் செல்வங்களை உவகையுடன் ஊக்குவிக்கத் தமிழ்ப் பெருமக்கள் இல்லத்தில் இப்பொங்கலைக் கொண்டாட்டும்.
தரணி வாழ் தமிழர்களது உள்ளத்தில், எரியும் தணல் அணைய எதிர்காலத்தில் சுதந்திரத் தமிழ் ஈழ விடியல் பிறக்கட்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications