விரைவில் திமுக ஆட்சி அமைந்து தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்க உறுதி ஏற்போம்: கனிமொழி

திருவல்லிக்கேணி 95வது வட்ட திமுக சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு வி.எம். தெருவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. இதில் திமுக எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு 500 பேருக்கு பொங்கல் செய்யத் தேவையான அரிசி, வெல்லம், நெய், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகள் மற்றும் 500 பெண்களுக்கு சேலைகள், 300 இளைஞர்களுக்கு பேண்ட்-சட்டைகள் வழங்கினார்.
அதன் பிறகு அவர் பேசியதாவது,
திமுக ஆட்சியில் தாய் வீட்டு சீதனம் போன்று தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு பொங்கல் பரிசுகளை கருணாநிதி வழங்கினார். தற்போது தமிழகத்தில் மின்சாரம் எப்போது வரும், போகும் என்பது தெரியாமலும், குழந்தைகள் படிக்க முடியாமலும், பெண்கள் சமைக்கக் கூட முடியாத அளவுக்கு கடும் மின்வெட்டு ஏற்படுகிறது. மேலும் விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளது.
ஒரு தெருவில் இருந்து இன்னொரு தெருவுக்கு செல்ல பயமாக உள்ளது. அந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது. பேருந்து. பால், மின் கட்டணம் ஆகியவற்றின் உயர்வால் தமிழகத்தில் விலைவாசி எப்படி உயர்ந்துள்ளது என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். அதனால் பொங்கல் பண்டிகை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விரைவில் திமுக ஆட்சி அமைந்து தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்க நாம் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications