சென்னையில் மெட்ரோ ரயில் கிரேன் மோதி சாப்ட்வேர் என்ஜினீயர் மரணம்!

நந்தனம் கிழக்கு சி.ஐ.டி. நகர் 2-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் கார்த்திகேயன் வயது 36. இவர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணா சாலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் நந்தனம் தேவர் சிலை அருகில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்தில் மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட ராட்சத கிரேன் ஒன்று கார்த்திக்கேயன் மீது மோதியது. இதில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் தூக்கி வீசப்பட்டது. இதனால் தலையில் அடிபட்டு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
பின்னர் அதே வேகத்தில் கார்த்திகேயனின் இடுப்பு மற்றும் தொடையிலும் கிரேன் பலமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கிரேன் ஆபரேட்டரான உத்தரப் பிதேசத்தைச் சேர்ந்த சஞ்சய்குமாரை கைது செய்த போலீசார் கிரேனை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கார்த்திகேயனின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான கார்த்திகேயனுக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும் 2 வயதில் விஸ்ருதா என்ற பெண் குழந்தை உள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, மனைவி குழந்தைகளை பல்லவபுரத்துக்கு தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்த கார்த்திகேயன் மதியம் வெளியில் சென்றுள்ளார். இதன்பிறகு நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பிய போதுதான் விபத்தில் சிக்கி பலியாகி விட்டார்.
இன்று காலையில் கணவனின் சடலத்தைக் கண்டு பிரியதர்ஷினி கதறி அழுதார். மகனை இழந்த துக்கத்தில் அவரது சோலையப்பன் அழுது துடித்தார்.
இது வரை 4 பேர் பலி:
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இப்பணிகள் நடைபெறும் இடங்களில் கிரேன் கவிழ்ந்தும், தூண்கள் சரிந்து விழுந்தும் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இது 5-வது விபத்து இதுவாகும். கார்த்திகேயனுடன் சேர்த்து இதுவரை 4 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இதில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். வட மாநில வாலிபர்களின் உயிரை மட்டும் பறித்து வந்த மெட்ரோ ரயில் கிரேன் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் முதல்முதலாக சென்னை இளைஞர் ஒருவரின் உயிரை பறித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications