இருளர் பெண்கள் கற்பழிப்பு: 5 போலீசாரின் சஸ்பெண்ட் சரியே!... ஹைகோர்ட் தீர்ப்பு
சென்னை: இருளர் இன பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் திருக்கோவிலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீஸ்காரர்களை பணிஇடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி விழுப்புரம் மாவட்டம், திருகோவிலூர் தாலுகாவில் உள்ள டி.மண்டபம் கிராமத்தை சேர்ந்த இருளர் இனத்தை சேர்ந்த பெண்களை பலாத்காரம் செய்யதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.சீனிவாசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன், போலீஸ்காரர்கள் ஆர்.தனசேகரன், ஆர்.பக்தவச்சலம், கார்த்திகேயன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் பணிஇடைநீக்கம் செய்து 28.11.2011 அன்று விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீனிவாசன் உட்பட 5 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
பழங்குடி இனத்தை சேர்ந்த 4 பெண்களை சட்டவிரோதமாக பிடித்து வைத்து, அவர்களை கற்பழித்ததாக தீவிர குற்றச்சாட்டுகள் மனுதாரர்களுக்கு எதிராக உள்ளது.
இவர்கள் மீதான கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்த பின்னர், விசாரணை கோர்ட்டில் இந்த ஆதாரங்களை வைத்து அவர்கள் நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். இப்போது மனுதாரர்கள் சீனிவாசன் உட்பட 5 பேர் மீதும் கற்பழிப்பு உள்ளிட்ட தீவிர குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால், அவர்களை சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி. பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி சந்துரு தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications