திருப்பூரில் களை இழந்த காணும் பொங்கல்…. வழக்கமான உற்சாகமில்லை!

காணும் பொங்கல் திருவிழா கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் ‘பூப்பறிக்கிற நோன்பாக' கொண்டாடப்படுகிறது. ஆறு குளம், அணை உள்ள பகுதிகளில் உற்றார் உறவினருடன் சென்று வீட்டில் இருந்து கொண்டு சென்றுள்ள பலகாரங்களை சாப்பிட்டு வருவார்கள்.
இந்த நிலையில் திருப்பூரில் காணும் பொங்கல் விழா நேற்று களை இழந்து காணப்பட்டது. வழக்கமாக மக்கள் கூடும் இடமான வெள்ளிவிழா பூங்காவிற்கு குறைந்த அளவிலான பொதுமக்களே வந்தனர். அவர்களும் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். காரணம் பூங்கா எந்தவித பராமரிப்பும் இன்றி சிதிலமடைந்து காணப்பட்டதுதான்.
சிறுவர்கள் விளையாடும் இடங்கள், பார்க்கில் உள்ள பெஞ்ச், நீர் ஊற்று போன்றவை எந்தவித பராமரிப்பும் இன்றி பாழடைந்து காணப்பட்டது. பலகோடி ரூபாய் அந்நிய செலாவணி ஈட்டித்தரும் திருப்பூர் டாலர் சிட்டி என்று அழைக்கப்படுகிறது.
பல லட்சம் தொழிலாளர்கள் இங்கு வசிக்கின்றனர். அவர்கள் பொழுது போக்குவதற்கு கூட சரியான பூங்கா இல்லை என்பது பலரின் குறையாக உள்ளது.
பார்க் தவிர ஒரே பொழுது போக்கு மையமான பொருட்காட்சியில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஆனாலும் சரியான வசதிகளோ, ஏற்பாடுகளோ செய்யப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருந்தது.












Click it and Unblock the Notifications