மருத்துவமனையில் உண்ணாவிரதம் சிறப்பு முகாம் அகதிகள் 9 பேர் நள்ளிரவில் கைது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றக் கோரி மருத்துவமனையிலும் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 9 ஈழத் தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த செல்வராசா, சவுந்தர்ராஜன், தவதீபன், நந்தகுமார் உள்பட 9 பேர் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.
இவர்கள் 9 பேரின் உடல்நிலை மோசமானதால் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கும் சிகிச்சையை ஏற்க மறுத்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து 9 பேரையும் தற்கொலைக்கு முயன்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நள்ளிரவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் அங்கும் தொடர் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
நடைபயணத்துக்கு தடை
இதனிடையே ஈழத் தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் சிறப்பு முகாம்களை மூடக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன் தலைமையில் பூவிருந்தவலியிருந்து செங்கல்பட்டு நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த நடைபயணத்துக்கு போலீசார் தடை விதித்து நடைபயணம் சென்றோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications