கடவுளை சாந்தப்படுத்த அரிசோனா எரிகல் பள்ளத்தில் குதித்த இந்தியர்!: 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யூனியன் சிட்டியைச் சேர்ந்தவர் பர்மிர்ந்தர் சிங் (28). இவர் கடந்த 11ம் தேதி, திடீரென அரிசோனாவுக்கு கிளம்பிச் சென்றார். அங்கு எரி கல்லால் உருவான கருதப்படும் சுமார் 100 அடி ஆழ பள்ளம் ஒன்று உள்ளது. அன்று மாலை 4 மணி அளவில் பள்ளத்தின் மேற்பகுதியில் பர்மீந்தர் நின்று குதிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியர் ஒருவர் பர்மீந்தரை அங்கிருந்து நகரும்படி எச்சரித்தார். ஆனால், அதைக் கேட்காமல் திடீரென அந்த பள்ளத்தில் பர்மீந்தர் குதித்தார். இதனையடுத்து அந்த ஊழியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மீட்பு படையினருடன் அங்கு விரைந்து வந்தனர்.
அப்போது பலத்த காற்றுடன் பனி கொட்டியது. எரிகல் பள்ளத்துக்குள் இறங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. பேரிடர் மேலாண்மை, அவசரகால குழு உள்ளிட்ட 3 குழுக்களைச் சேர்ந்த 30 பேர் பர்மீந்தர் சிங்கை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு வழியாக அவர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் எரிகல் பள்ளத்தை ஒட்டிய பகுதிக்கு சென்றனர். அங்கிருந்து பல முறை குரல் கொடுத்தபோது, இரவு 8.22 மணி அளவில் பர்மீந்தர் சிங் உயிருடன் இருப்பது தெரியவந்தது.
உறை பனியுடன் கூடிய சுழல் காற்றில், மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள், பர்மீர்ந்தர் சிங் சுமார் 100 அடி ஆழத்தில் விழுந்துள்ளார் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவர் சாப்பிடுவதற்காக உணவு, குடிநீர், சிறிய வாக்கிடாக்கி, குளிரை தாங்கிக் கொள்ளும் உடை, பிளாஷ் லைட் ஆகியவற்றை கயிற்றின் உதவியுடன் அவருக்கு அனுப்பினர்.
தொடர்ந்து 8 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவர் வெளியே மீட்கப்பட்டார். ‘எதற்காக எரிகல் பள்ளத்தில் குதித்தீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, ‘கடவுளை சமாதானப்படுத்துவதற்காக எரிகல் பள்ளத்தில் குதித்தேன்' என்று பர்மீந்தர் சிங் கூறினார். இதைக் கேட்டு நொந்து போன மீட்பு படையினர், காயமுற்றிருந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications