மதுரை அருகே அரசு பஸ்- மினி வேன் மோதல்: 2 பேர் பலி-10 பேர் காயம்
மதுரை: மதுரை அருகே பரவையில் மினிவேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் பலியானார்கள் பத்துபேர் படுகாயமடைந்தனர்.
பரவையில் உள்ள ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டுக்கு கொடைக்கானலில் உள்ள பிரகாசபுரத்தை சேர்ந்த ஜான் மகன் டெனிசன் (வயது22), பிரான்சிஸ் மகன் சுகுமாறன் (19) ஆகிய இருவரும் காய்கறிகளுடன் வந்தனர்.
காய்கறிகளை இறக்கிவிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் ஒரு மினிவேனில் ஊருக்கு திரும்பினர். அப்போது திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து வேன் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் வேனின் முன் பகுதி பேருந்தின் முன் பகுதிக்குள் புகுந்தது. இதில் வேனில் இருந்த டெனிசன், சுகுமாறன் ஆகிய 2 பேர் அதே இடத்தில் நசுங்கி பலியானார்கள். வேன் டிரைவர் குதித்து தப்பிவிட்டார். பேருந்தில் இருந்த டிரைவர், கண்டக்டர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான வேனையும், பேருந்தையும் 2 மணி நேரம் போராடி அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சமயநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களின் சடலங்களை மீட்டனர். அதிகாலை நேரத்தில் பிரதான சாலையில் விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications