விடாது கறுப்பு... நிதின் கட்காரியுடன் தொடர்புள்ள 8 நிறுவனங்களில் வருமான வரி ரெய்ட்!
நிதின் கட்காரியின் பெயரைக் கெடுக்க வருமான வரித்துறையை காங்கிரஸ் தவறாக பயன்படுத்துவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மகாராஷ்டிரா நீர்பாசனத் திட்டத்தில் ஊழல் முறைகேட்டில் கத்காரிக்கு தொடர்பிருக்கிறது என்ற புகாரைத் தொடர்ந்து அவரது பூர்த்தி நிறுவனங்களிலும் முறைகேடு இருப்பதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ஏற்கெனவே வருமான வரித்துறையினர் கத்காரிக்கு தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடத்தியிருந்தனர்.
இந் நிலையில் பூர்த்தி நிறுவனத்துடன் தொடர்புடைய 8 நிறுவனங்களில் இன்று இந்த ரெய்ட் நடந்தது.
மேலும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் கட்காரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், பிப்ரவரி 1ம் தேதி வரை அவர் அவகாசம் கோரியுள்ளதாகவும் தெரிகிறது.
பாஜக தலைவர் பதவிக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் மீண்டும் களத்தில் குதித்துள்ளார் நிதின் கட்காரி. நாளை இவரது பெயர் முன்மொழியப்படும் என்று தெரிகிறது. ஆனால், கட்காரியை பாஜக தலைவர் மூத்த தலைவரான அத்வானி ஏற்கவில்லை. இந்தப் பதவிக்கு சுஷ்மா சுவராஜை நியமிக்க வேண்டும் என்கிறார் அத்வானி.
ஆனால், இதை ஆர்எஸ்எஸ் ஏற்கவில்லை. கட்காரியையே மீண்டும் தலைவராக்க நினைக்கிறது.
இவ்வாறு பாஜக தலைவர் பதவி விவகாரத்தில் பெரும் சிக்கல் நிலவும் நிலையில், தேர்தலும் விரைவில் நடக்கவுள்ள நிலையில், இன்று வருமான வரித்துறையை விட்டு ரெய்ட் நடத்தி கட்காரிக்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.
மேலும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் கட்காரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் தனது அரசியல் எதிர்காலம் குறித்த குழப்பங்கள் தீர்ந்துவிடும் என்பதால் பிப்ரவரி 1ம் தேதிக்கு மேல் நேரில் ஆஜராவதாக கட்காரி கூறியுள்ளார்.
பாஜகவின் பெயரைக் கெடுக்கவும், கட்காரியின் இமேஜை கெடுக்கவுமே காங்கிரஸ் அரசு இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியுள்ளார். வழக்கமாக சிபிஐ அமைப்பை பயன்படுத்தி எதிர்க் கட்சிகளை மிரட்டும் மத்திய அரசு இப்போது வருமான வரித்துறையை மூலம் ரெய்ட் நடத்தியுள்ளது என்றார்.