மாவட்டங்களில் நுழைய ராமதாஸுக்கு தடை- தொல். திருமாவளவன் எதிர்ப்பு
கடலூர்: ஒரு அரசியல் தலைவருக்கு தடை விதிப்பதன் மூலம் வன்முறையைத் தடுத்துவிட முடியாது என்றும் தலித்துகளுக்கு எதிராக இதர சாதியினரை ஒருங்கிணைப்பதற்காகவே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சமூக பாதுகாப்பு சட்டமான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. இந்த சட்டத்தால் ஜாதி வன்கொடுமைகளை தடுக்க முடியாத நிலைதான் உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு என்னை கடலூர் மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கருணாநிதி தடைவிதித்தார். ஆனால் அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா வாயை திறக்கவே இல்லை.
ஒரு அரசியல் தலைவருக்கு தடைவிதிப்பது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால் ஜனநாயகத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை ஜெயலலிதா எடுக்காதது ஏன்?.
டாக்டர் ராமதாஸ், கருணாநிதியை வன்னியர்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டை கூறி வருகிறார். ஆனால் கருணாநிதி ராமதாஸ் மீது விதிக்கப்பட்டுள்ள தடைக்கு கண்டனம் தெரிவித்து ராமதாசையும், ஜெயலலிதாவையும் அரசியல் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளார்.
தலித்துகளுக்கு எதிராக மற்றவர்களை ஒருங்கிணைப்பதே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். இதற்கென எடுக்கப்படும் முயற்சிகளும் தவறானவை. ஆனால் அரசு இதை ஏன் வேடிக்கை பார்க்கிறது என்பது புதிராக உள்ளது. வன்முறையை தடை விதிப்பதன் மூலம் தவிர்க்க முடியாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications