மும்பை குடிசைப் பகுதியில் பயங்கர தீ: 6 பேர் பலி, 8 பேர் படுகாயம், 50 வீடுகள் நாசம்
மும்பை: தெற்கு மும்பையில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
தெற்கு மும்பையில் உள்ள மாஹிம் அருகே நயாநகர் குடிசைப் பகுதி உள்ளது. அங்கு இன்று காலை 5 மணி அளவில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள சுமார் 50 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். குடிசைப் பகுதி என்பதால் தீ மளமளவென பரவியது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 7 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 6 பேர் உடல் கருகி பலியாகினர், 8 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
மாஹிம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் சம்பவ இடத்திற்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார். வீடுகளை இழந்தவர்களுக்கு வசிப்பிடத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications