விஸ்வரூபம் பிரச்சினையை மேலும் நீட்டிக்காமல் முடிவு காண வேண்டும்- கருணாநிதி

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
கலைஞானி தம்பி கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் ரிபாயி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்டிருப்பதைப் போல, சூப்பர் ஸ்டார் நண்பர் ரஜினிகாந்த் அவர்களும், கலைஞானி தம்பி கமல்ஹாசன் அவர்களும், இஸ்லாமிய சமுதாயத்திடம் பாசமும், பற்றும், மதிப்பும் மரியாதையும் உடையவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
உலகில் எந்தவொரு பகுதியிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறும் விமர்சனங்களையோ, கிளர்ச்சிகளையோ நானும் என் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் என்றைக்கும் ஆதரித்தது இல்லை, அவற்றை எதிர்த்தே குரல் கொடுத்திருக்கிறோம்.
இஸ்லாமிய சமூகத்தினருக்கும், பிற சமூகத்தினருக்கும் இடையே நல்லுறவு என்றைக்கும் பட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே நான் மிகுந்த அக்கறை உடையவன் என்பதை எவரும் மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் கலைஞானி கமல்ஹாஸனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை, மேலும் நீட்டிக்காமல், ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை கலந்தாலோசனை மூலமாக முடிவுக்ககு கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
சட்டம் ஒழுங்கு அமைதியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலுள்ள தமிழக அரசும் அற்கு ஒத்துழைத்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications