சென்னை ஏர்போர்ட் முனையங்கள் திறப்பு: துணை ஜனாதிபதி பங்கேற்ற விழா.. ஜெ. புறக்கணிப்பு
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட 2 முனையங்களை குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி இன்று திறந்து வைத்தார். இந்த விழாவை முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை அதி நவீன அழகுடன் கூடிய விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. ரூ.2015 கோடி செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ள நவீன விமான நிலைய கட்டிடங்களை இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி திறந்து வைத்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்கால வளர்ச்சியின் தேவையை சமளிக்க கூடிய வகையில் 1,33,462 சதுர மீட்டர் கொண்ட புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு உள்ளன.
தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. இந்த விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் ஆண்டுக்கு 1 கோடியே 40 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.
பயணிகள் எந்தவித தடையின்றி விரைவாக பயணம் செய்யும் வகையில் புதிய விமான நிலையம் இருக்கும். சென்னை விமான நிலையம் சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் பேட்டரி மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா புறக்கணிப்பு
இந்த நிகழ்ச்சியை முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார். விமான நிலைய 2ம் முனையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்ட வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் மத்திய அரசு அதற்கு பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் முனையங்கள் திறப்பு விழாவை ஜெயலலிதா புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் குடியரசுத்துணைத் தலைவரை முதல்வர் என்ற முறையில் வரவேற்றதாக ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications