குமரிக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள் மாயம்: குடும்பத்தினர் கண்ணீர்
குமரி: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 7 குமரி மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அவ்வப்போது மாயமாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. அவர்களை மீட்க கடலோர ஹெலிகாப்டர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பொழிக்கரை மீன்பிடி கிராமத்தில் இருந்து இரு நாட்டுப்படகுகளில் 3 பேர் வீதம் 6 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இரவில் கடும் சூறைக்காற்று வீசியதில் இரு படகுகளும் கடலில் கவிழ்ந்துள்ளது. அப்போது பக்கத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கவிழ்ந்த ஒரு படகில் இருந்த பொழிக்கரையைச் சேர்ந்த ராபர்ட், சேவியர், மரிய தன்சிகர் ஆகியோரை மீட்டு நேற்று அதிகாலை கரைக்கு கொண்டு வந்தனர்.
அதே நேரம் மற்றொரு படகில் சென்ற பிரான்சிஸ், ரமேஷ், ஜேம்ஸ் ஆகியோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. சூறைக்காற்றில் கவிழ்ந்ததாக கூறப்படும் அவர்களின் நாட்டு படகும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதைப்போல் இரையுமன் துறையில் இருந்து ஒரு நாட்டுப்படகில் சென்ற மீனவர்களும் மாயமாகியுள்ளனர். அவர்களின் நிலை என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. அப்படகில் இரையுமன் துறையைச் சேர்ந்த ராஜு, ஜான்சன், பூத்துறை சேவியர், வறுவேல் ஆகியோர் இருந்தனர். அவர்களை பற்றிய தகவலும் கிடைக்கவில்லை.
இரு நாட்டுப்படகுகளிலும் சென்ற 7 மீனவர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியாத நிலையில் அவர்களின் குடும்பம் சோகத்தில் வாடி வருகிறது. இது குறித்து குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தருமாறும் மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் தென்னக கடலோர காவல்படை டி.ஐ.ஜி. ஆனந்த் பதுலாவிடம் மீனவர்களை மீட்டுத் தருமாறு தெற்காசிய மீனவ தோழமைப்பினர் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஆனந்த்குமார் தலைமையிலான குழுவினர் மீனவர்களை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications