சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு: ஆளுநர் உரையாற்றியபோதே போட்டி உரையாற்றிய ஸ்டாலின்
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று தொடங்கியது. கவர்னர் ரோசய்யா உரையாற்ற ஆரம்பித்ததும் திமுக சட்டமன்றத் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒரு உரையை வாசித்தார். இதனால் குழப்பம் நிலவிய நிலையில், ஸ்டாலின் தனது உரையை வாசித்து முடித்துவிட்டு அவையை விட்டு வெளியேறினார். அவருடன் திமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. கவர்னர் ரோசய்யா சரியாக 9.59 க்கு சட்டசபைக்கு வந்தார். அவரை சபாநாயகர் தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர்.
10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. 10.02 மணிக்கு கவர்னர் ரோசய்யா உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது திமுக சட்டசபை தலைவர் மு.க. ஸ்டாலின் எழுந்து ஒரு உரையை வாசித்தார். அதே நேரத்தில் கவர்னர் பேச்சுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் மேஜைகளைத் தட்டினர்.
மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையை படித்து முடிக்கும் வரை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மேஜைகளைத் தட்டிக் கொண்டே இருந்தனர். இதனால் கவர்னர் உரையாற்றியதும், மு.க.ஸ்டாலின் பேசியதும் என்னவென்றே யாருக்கும் புரியவில்லை. பெரும் குழப்பமான நிலை நிலவியது.
காவிரி, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஸ்டாலின் தனது உரையை வாசித்து முடித்ததும் வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு வெளியேறினார். அவர் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
புதிய தமிழகமும் வெளிநடப்பு:
இதேபோல டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட புதிய தமிழகம் கட்சியின் இரு உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்து வெளியேறினர்.
விஜயகாந்த் வந்தார்.. முதல்வருக்கு வணக்கம் வைத்தார்:
இன்றைய கூட்டத்தில் தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் சட்டசபைக்கு வந்தார். அவையில் உள்ள அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா வணக்கம் தெரிவித்தபோது பதிலுக்கு விஜயகாந்தும் வணக்கம் தெரிவித்தார்.