தாம்பரம் அருகே திமுக ஊராட்சி மன்றத் தலைவர் வெடிகுண்டு வீசி கொலை
தாம்பரம்: தாம்பரம் அருகே திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.
குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேத்துப்பட்டு கிராமத்தை சேர்ந்த சங்கர், அவரது சகோதரர் வாசு இருவரும் நேற்று தாம்பரம் வழியாக சுங்குவார்சத்திரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.
தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே, கார் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், காரை வழிமறித்து வெடிகுண்டு வீசினர். இதில் தப்பி வெளியே ஓடிய சங்கரையும் அவரது சகோதரரையும் அரிவாளால் தாக்கினர். இதில பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாசு மற்றும் கார் ஓட்டுநர் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சங்கர் மீது, தாக்குதல் நடப்பது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதி, அவர் வந்த கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் ஓட்டுநர் உயிரிழந்தார். சங்கரும், அவரது சகோதரர் வாசுவும் காயங்களுடன் உயிர் தப்பினர். இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
முக்கிய குற்றவாளியான ஆனந்தன் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில், இரண்டாவது முயற்சியாக நேற்று நடந்த தாக்குதலில் சங்கர் கொல்லப்பட்டிருக்கிறார்.
ஊராட்சி மன்றத் தேர்தலில் ஏற்பட்ட போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.