டெல்லியில் இளம்பெண்ணை கற்பழிக்க முயன்று வாயில் இரும்பு கம்பியை திணித்த வாலிபர்
டெல்லி: தென்கிழக்கு டெல்லியில் 19 வயது பெண்ணை கற்பழிக்க முயன்றபோது அவர் எதிர்த்ததால் அவரின் வாயில் இரும்புக் கம்பியை திணித்துள்ளார் ஒரு வாலிபர்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள லாஜ்பட் நகரில் தாய் மற்றும் சகோதரருடன் வசிக்கும் 19 வயது பெண் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது லாஜ்பட் நகர் அருகே வசிக்கும் கேபிள் ஆபரேட்டரிடம் எலக்ட்ரீசியனாக இருக்கும் அனில் குமார்(26) அந்த வீட்டுக்கு வந்துள்ளார். மின்சார கட்டணம் வசூலிப்பது போன்று வந்து கதவைத் தட்டியுள்ளார். அந்த பெண் கதவைத் திறந்ததும் அத்துமீறி உள்ளே சென்று அவரை கற்பழிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அப்பெண் எப்படியோ அவர் பிடியில் இருந்து தப்பித்து சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த பாத்திரங்களை அனில் மீது வீசியுள்ளார். அதையும் தாண்டி அனில் அப்பெண்ணை பிடிக்கவே அவர் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அனில் அவரை அடித்ததுடன் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து அவரின் முகத்தில் அடித்ததோடு அதை அவரின் வாயில் திணித்துள்ளார்.
இதில் அப்பெண் காயமடைந்து ரத்தம் கொட்டவே இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று மிரட்டிவிட்டு அனில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து அப்பெண் வெளியே வந்து சத்தம்போட்ட பிறகு அக்கம்பத்தினர் ஓடிவந்து அவரை மூல்சந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் அங்கிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அனிலை பரிதாபாத்தில் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி, கற்பழிப்பு முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications