ஈழத்தமிழர்களுக்காக விரைவில் பெரிய மாநாடு: கருணாநிதி அறிவிப்பு
திருச்சி: ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை, வாழ்வாதாரத்திற்காக விரைவில் பெரிய மாநாடு நடத்தப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திருச்சி பொன்மலை ஜி. கார்னர் ரயில்வே மைதானத்தில் திருச்சி மாவட்ட திமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதியிடம் ரூ.5 கோடி தேர்தல் நிதி வழங்கப்பட்டது.
நிதியை பெற்றுக் கொண்ட பிறகு அவர் உரை நிகழ்த்தினார்.
ஈழத்தமிழர்களுக்காக போராடும் நம்மைப் பார்த்து...
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்த நம் கவலையை உலகிற்கு உணர்த்தினோம். மேலும் டெசோ அமைப்பின் மூலம் ஈழத்தமிழர்களின் நிலை குறித்து உலகிற்து தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவர்களின் நல்வாழ்வுக்காக கோரிக்கை விடுத்துள்ளோம்.
விரோதிகள் போல பேசுகிறார்கள்
இப்படி கடந்த 56 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்காக போராடி வரும் நம்மை போய் சிலர் ஈழத்தமிழர்களின் விரோதிகள் போல பேசி வருகிறார்கள். இலங்கையில் போர் நடந்த போது நாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறுகிறார்கள். ஏதோ அவர்கள் எல்லாம் கையில் துப்பாக்கியுடன் கடற்கரையில் நின்று சண்டைபோட்டு தடுத்தது போன்று பேசுகிறார்கள்.
விடுதலை அல்ல சுயாட்சி தான் கேட்கிறார்கள்
இலங்கையில் உள்ள கிராமங்களில் 99 கிராமங்களின் பெயர்களை சிங்கள பெயர்களாக மாற்றிவிட்டனர். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியதற்கு நாங்கள் கவனிக்கிறோம் என்று பதில் அனுப்பி உள்ளனர்.
தமிழர்கள் கேட்பது சுயாட்சிதான்
இலங்கை அதிபர் சொல்வது போன்று அங்குள்ள தமிழர்கள் ஒன்றும் விடுதலை கேட்கவில்லை சுயாட்சி தான் கேட்கின்றனர். அந்த கோரிக்கையைத் தான் திமுகவும் டெசோ அமைப்பில் உள்ள பிற கட்சிகளும் டெல்லியில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து கொடுத்தன.
ஈழத் தமிழர்களுக்காக விரைவில் மாநாடு
ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்வுரிமைக்காக விரைவில் பெரிய மாநாடு நடத்தப்படும். அந்த மாநாட்டில் பல நாட்டினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். ஈழத் தமிழர்களுக்காக திமுக மற்றும் டெசோ அமைப்பில் உள்ள கட்சிகளின் குரல்கள் ஒலிக்கும்.
அகிம்சை வழியில் தமிழர்களுக்காக போராடுவோம்
ஈழத் தமிழர்களுக்காக அஹிம்சை வழியில் போராடுவோம், போராடிக் கொண்டே இருப்போம். அவர்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இந்த கூட்டம் வெறும் தேர்தல் நிதி பெறும் கூட்டமல்ல, தேறுதல் தரும் கூட்டமும் கூட என்றார்.