கொல்கத்தா கல்லூரியில் மாணவர்களிடையே மோதல், வன்முறை, துப்பாக்கிச்சூடு: எஸ்.ஐ. பலி
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்றில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில் ஒரு எஸ்.ஐ. துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹரிமோகன் கோஷ் கல்லூரியில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையடுத்து கல்லூரி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள மாணவர்கள் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்யவிருந்தனர். மனு தாக்கலின்போது காங்கிரஸின் மாணவர் அணியான சத்ர பரிஷத் மற்றும் ஆளும் திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அணியான திரிணாமூல் சத்ர பரிஷத் உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறப்பு பிரிவு எஸ்.ஐ. தபஷ் சவுத்ரி என்பவர் மீது குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமைடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
முன்னதாக நேற்று இரவு இதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குண்டு வெடித்ததில் திரிணாமூல் காங்கிரஸ் கவுன்சிலரின் மகன் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். அந்த வீட்டில் வைத்து குண்டு தயாரித்தபோது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுகளை கல்லூரி தேர்தலின்போது பயன்படுத்த திட்டமிட்டு தயாரித்திருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications