'ஆன் டூட்டி'யில் தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் மடவூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். துபாயில் பணிபுரி்ந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. கணவர் துபாயில் இருப்பதால், ஸ்ரீஜா மட்டுமே தனியாக இருந்துள்ளார்.
சில நாட்களில் ஸ்ரீஜா இரவில் தூங்குவதற்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விடுவார். இதை அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்ரீஜா உறவினர் வீட்டு்க்கு தூங்க சென்றார். இதைக் கவனித்த திருடன் நள்ளிரவில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக திருடி விட்டு செல்லலாம், இப்போது என்ன அவசரம் என கருதி மெத்தனமாக வீட்டுக்குள் சுற்றித் திரிந்துள்ளான். அப்போது அசதியில் தூக்கம் வந்துள்ளது.
எனவே அப்படியே படுக்கையில் படுத்துத் தூக்கம் போட்டுள்ளான். கும்பகர்ண தூக்கமாக மாறியது. ஆழ்ந்த நித்திரைக்குப் போய் விட்டான். விடிந்தது கூட தெரியவில்லை. இந்தநிலையில் காலையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா படுக்கை அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைநதார்.
சுதாரித்து கொண்ட அவர் மெதுவாக வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்து பல்லிக்கல் போலீசுக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வீட்டில் சொகுசாக தூங்கி கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி விசாரித்தனர். அதில் அவர் மடவூர் பல்லிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பது தெரிய வந்தது. ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து திருட வந்ததாகவும், பல நாள் தூங்காமல் இருந்ததால் அசதியில் தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஸ்ரீஜித்தை ஆற்றின்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலிலில் வைத்தனர்.