ஜெ. பிறந்தநாள் முதல் மலிவு விலை உணவகங்களில் சாப்பிடலாம்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள மலிவு விலை உணவகங்கள், முதல்வரின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்படுகிறது.
சென்னை மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள தொழிலகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த உணவகங்கள் முதல்வரின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி முதல் தொடங்கி வைக்கப்படுகின்றன.
சென்னையில் முதல் கட்டமாக 15 உணவகங்களை அரசு தொடங்குகிறது. இவை அனைத்தும் சிற்றுண்டி உணவகங்கள் ஆகும்.

இட்லி - சாம்பார் சாதம் -தயிர் சாதம்
இந்த உணவகங்களில் குறைந்த விலையில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் விற்கப்படும்.

ஒரு ரூபாய்க்கு இட்லி
இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 1000 உணவகங்கள்
சென்னை மாநகராட்சியின் நடப்பு நிதி ஆண்டின் மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில், மாநகராட்சி சார்பில், 1,000 மலிவு விலை சிற்றுண்டி உணவகங்கள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது முதல் கட்டமாக 200 சிற்றுண்டி உணவகங்கள் தொடங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போதைக்கு மண்டலத்திற்கு ஒன்று
சலுகை விலை உணவகங்கள் தொடங்குவதற்கு முன்னோட்டமாக மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு உணவகம் வீதம் 15 உணவகங்கள் பொது மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் வார்டுக்கு ஒன்று
15 உணவகங்களும் மாநகராட்சி இடங்களிலும், சமுதாயக் கூடங்களிலும் வரும் 24-ம் தேதி முதல் செயல்பட உள்ளன. இது பெறும் வரவேற்பைப் பொறுத்து வார்டுக்கு ஒன்று தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் இது மேலும் விரிவாக்கப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் பொறுப்பில்
மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு, உணவு வகைகளைத் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications