அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன கரும்பு கொள்முதல் விலை என்ன ஆயிற்று? கருணாநிதி
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் மூன்றரை லட்சம் கரும்பு விவசாயிகள் உள்ளனர். கூட்டுறவு துறையில் 16 - பொதுத் துறையில் 3 - தனியார் துறையில் 28 என சர்க்கரை ஆலைகள் உள்ளன. தற்போது கரும்பு கொள்முதல் விலையாக 2,350 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் வாகன வாடகைக்கு என்ற 100 ரூபாய் பிடித்தம் போக மீதம் 2,250 ரூபாயைத் தான் விவசாயிகளிடம் கரும்பு ஆலை நிர்வாகங்கள் வழங்குகின்றன.
2011ம் ஆண்டு பொதுத் தேர்தல் நேரத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்கள்? "கரும்பு கொள்முதல் விலை, டன்னுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தப்படும்" என்று அறிவித்திருந்தார்கள்.
தேர்தல் அறிக்கையில் இவ்வாறு சொல்லிவிட்டு அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், கரும்பு கொள்முதல் விலை 2,100 ரூபாய் என்று தான் அறிவித்தார்கள். இதனால் விவசாயிகள் எல்லாம் பெரிதும் ஏமாற்றம் அடைந்ததோடு, இந்த ஆண்டிலாவது டன் ஒன்றுக்கு, தேர்தல் அறிக்கையிலே அறிவித்த, 2,500 ரூபாயை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்த ஆண்டும் 2,350 ரூபாய் என்ற அளவிற்குத் தான் உயர்த்தியிருக்கிறார்கள்.
ஒரு வேளை தேர்தல் அறிக்கையில் தங்களது ஆட்சிக் கால முடிவில் 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்க இருந்தார்களோ என்னவோ? தமிழக விவசாயிகளின் நிலை, இலவுகாத்த கிளி போல ஆகிவிட்டது!
கரும்பு வெட்டுக் கூலி மற்றும் வாகன வாடகையை, சர்க்கரை ஆலை நிர்வாகங்களே ஏற்க வேண்டுமென்றும், கரும்பு கொள்முதல் விலையை இந்த ஆண்டு முதல் டன் ஒன்றுக்கு 3,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும் கரும்பு விவசாயிகள் தற்போது கோரி வருகிறார்கள். ஆளுநர் உரையில் கரும்பு கொள்முதல் விலை பற்றிய அறிவிப்பு வரும் என்று காத்திருந்து, பின்னர் முதலமைச்சர் பதில் உரையிலாவது தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து - நெல் சாகுபடி செய்த விவசாயிகள், குறுவையும் சம்பாவும் பொய்த்துப் போனதால் உரிய அளவு நிவாரணம் கிடைக்குமென்று காத்திருந்து ஏமாந்து போனதைப் போல -இவர்களும் ஏமாந்து போய் இருக்கிறார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.