கருணாநிதி மீது மேலும் ஒரு வழக்கு... அமைச்சர் வைத்திலிங்கம் போட்டார்
வார இதழ் ஒன்றில், 22.8.2012 தேதியிட்ட இதழில், அம்மா ஸ்கூல் ஆல் பாசா ? என்ற தலைப்பில் செய்தி வெளியானது. அதில், வீட்டு வசதி வைத்தியலிங்கத்தின் பொலிடிக்கல் பி.ஏ.வாக இருக்கும் காந்திதான் அங்கு எல்லாம். அதை விட காந்தியின் மச்சான் முத்துகுமார் ஆலோசனைப்படிதான் எல்லாம் நடக்கிறது என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வாசகத்தை குறிப்பிட்டு, 23.8.2012 தேதியிட்ட முரசொலி பத்திரிகையில் திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கேள்வி-பதில் கட்டுரையில் வெளியாகி இருந்தது.
இது, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கத்துக்கு சமுதாயத்தில் இருந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று கூறி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, முரசொலி பத்திரிகை ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை அமைச்சர் சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் இன்று தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி பொன்.கலையரசன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.