ரூ.25 கோடி போதை மாத்திரை கடத்திய ராணுவ அதிகாரிகள் கைது
இம்பால்: மணிப்பூர் அருகே பலகோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை மியான்மருக்கு கடத்த முயன்ற இந்திய ராணுவ அதிகாரிகள் போலீசில் சிக்கிய சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருபவர் அஜய் சவுத்திரி. இவர் மணிப்பூர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த பொறுப்பில் இருந்து வருகிறார். இவரது செயல்பாடுகள் சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ளதாக ராணுவ உயரதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்தன. இதனையடுத்து அவரை ராணுவ புலனாய்வு பிரிவினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் மியான்மர்-மணிப்பூர் எல்லைப்பகுதியான மோரே என்ற இடத்தில் அஜய் சவுத்ரி தலைமையில் சென்ற 3 வாகனங்களை, ராணுவ அதிகாரிகள் இன்று மடக்கி சோதனையிட்டனர்.
அப்போது 3 வாகனங்களிலும் பெட்டி, பெட்டியாக ‘சுடோபெட்ரைன்' என்ற போதை மாத்திரைகள் இருந்ததை கண்ட அதிகாரிகள் திடுக்கிட்டனர். இந்த மருந்துகளின் மதிப்பு சுமார் 25 கோடி ரூபாய் இருக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அஜய் சவுத்திரி மற்றும் 5 பேர் தற்போது போலீஸ் பிடியில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்த போதை பொருட்கள் மியான்மருக்கு கடத்தி கொண்டு செல்ல முயற்சிகள் நடந்துள்ளன. இங்கு இது போன்ற போதை பொருளுக்கு அங்கு வரவேற்பு அதிகம்.
இது குறித்து கருத்து கூறிய பாதுகாப்பு துறையினர், முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
போதை மாத்திரை கடத்திய அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவர்.












Click it and Unblock the Notifications