மதுவை ஒழிக்க தன்னலமின்றி பாடுபடுகிறார் வைகோ: குமரி அனந்தன் வாழ்த்து
பூரண மது விலக்கு கோரி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரச்சார நடைபயணம் மேற்கொண்டு வரும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவை குமரி அனந்தன் இன்று சந்தித்து பேசினார்.
இது குறித்து ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
'தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்தவும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடவும் உறுதியோடும், எதற்கும் அஞ்சாத நெஞ்சோடும் அறப்போராக நடந்து வருகின்ற வைகோவிற்கும், உடன் வருகின்ற சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளைக் கூறுகிறேன். மதுவின் கொடுமையால் தமிழகம் பாழாகின்றது. இதிலிருந்து தமிழகத்தை மீட்க தூய்மையான நோக்கத்தோடு தன்னலமின்றி வைகோ போராடுகிறார்.
தேசப்பிதா காந்தி, உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவர், பெருந்தலைவர் காமராஜர் வாழ்த்துகிறார். அண்ணா வாழ்த்துகிறார். வறுமையில் வாடும் ஏழைத் தாய்மார்கள் வாழ்த்துகிறார்கள். இந்த போராட்டத்துக்கு தமிழக மக்களின் நல் ஆதரவை வேண்டுகிறேன். மதுவை ஒழிக்கும் அறப்போரில் வைகோ வெல்வது நிச்சயம்' என்று குமரி ஆனந்தன் கூறினார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.