ஐ.ஆர்.சி.டி,சிக்கு ரூ.10 லட்சம் அபராதம்!: குளிர்பானத்தை அதிகவிலைக்கு விற்றதாக புகார்
டெல்லி: எம்.ஆர்.பி விலையை விட குளிர் பானங்களை அதிக விலைக்கு விற்றதாக எழுந்த புகாரை அடுத்து இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திற்கு டெல்லியின் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ரயில் நிலைங்களில் குளிர்பானத்தின் அதிக பட்ச விலையான 12 ரூபாயை விட 3 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்ததை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த சச்சின் திமன், சரண்யா ஆகியோர் நுகர்வோர் மன்றத்திடம் புகார் தெரிவித்தனர்.
இந்த புகார் மனுவை விசாரித்த குறைதீர்ப்பு மன்றம் அளித்த தீர்ப்பில்,"பல ஆயிரம் பயணிகளுக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு அரசு நிறுவனம் நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாகவே இந்த மன்றம் பார்க்கிறது.
பயணத்தின் காரணமாக எதிர்ப்பு தெரிவிக்க இயலாத பயணிகளை, சேவைகளைப் பெற அதிக விலைக்கு வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று கட்டாயப்படுத்துகிறது.
அரசின் ஒரு சேவை கழகமாக இருந்துகொண்டு தனியார் விற்பனையாளர்கள் போல நடந்து கொள்ளக் கூடாது. 24 மணி நேரமும் ஆண்டு முழுவதும் செயல்படும் ரயில்வே அதிக விலை வைத்து விற்பதால் அதற்கு கிடைக்கும் லாபத்தை மனதில் கொண்டு இந்தத் தீர்ப்பை நாங்கள் வழங்கியுள்ளோம்.
இந்தக் கழகம் 10 லட்சம் ரூபாயை டெல்லி மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் சேர்க்க வேண்டும். இந்த இரு மனுதாரர்களின் வழக்கு செலவுக்காக அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்."என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications